திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த கீழநம்மங்குறிச்சி ஊராட்சி பெத்தவேளாண் கோட்டகம் கிராமத்தைச் சேர்ந்த மேலத்தெருப் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
ஊராட்சி நிர்வாகம் இதுவரை அப்பகுதியில் சாலை வசதி செய்து கொடுக்காததால் தற்சமயம் பெய்த மழையால் சாலை முழுவதும் மழை நீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது.
இதனால் பொதுமக்கள் நடப்பதற்கும் அவசர நேரத்திற்கு வாகனங்கள் வந்து செல்வதற்கும் மிகவும் சிரமமாக உள்ளது. இது குறித்து கீழநம்மங்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவரிடம் பல முறை இந்த மண்சாலையை தார் சாலையாக மாற்றி சீரமைத்து தரக் கோரியும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் அதிர்ப்தி அடைந்த கிராமமக்கள் நேற்று அப்பகுதி கவுன்சிலர் சுரேந்திரன், இ. கம்யூனிஸ்ட் ஒன்றிய நிர்வாக குழு சிவசந்திரன், தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட துணைச் செயலாளர் மங்கள் கார்த்திக், ஒன்றிய துணைச் செயலாளர் ராஜா ஆகியோரது தலைமையில் ஆண்களும் பெண்களும் சாலையில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து அதே பகுதியைச் சேர்ந்த ராணி, சுசிலா ஆகியோர் கூறுகையில்: இது போன்று பல வருடங்களாக வசித்து வருகிறோம். ஒவ்வொறு முறையும் தேர்தலின் போது ஊராட்சி மன்ற தலைவர்கள் இந்த சாலையை சீரமைத்து தருவதாக வாக்குறுதி கூறுகிறார்களே தவிர சீரமைத்து தந்தபாடில்லை.
உடல் நலக்குறைவு ஏற்பட்டால் கூட அவசர உதவிக்கு வாகனங்கள் கூட செல்லமுடியவில்லை. குழந்தைகள் செல்ல முடியாமல் உள்ளது. உடனடியாக இந்த சாலையை சீரமைத்து தராவிட்டால் வருகிற சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என்றார்.
இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் ரவி கூறுகையில்: இந்த சாலை ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படாமல் உள்ளது. அதனால் அந்த சாலையை ஊராட்சி சார்பில் சீரமிக்க வாய்ப்பில்லை என்றார்.
படம் & செய்தி: நிருபர்-மு.முகைதீன்பிச்சை முத்துப்பேட்டை.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக