பொய்யான
வாக்குறுதிகளை அளித்து, அப்பாவி மக்களை ஏமாற்றி
வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பும் டிராவல் ஏஜென்டுகள் மீது
கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை
விடுத்துள்ளது.
வெளிநாட்டில்
பணிக்குச் சென்றால் அதிகம் சம்பாதிக்கலாம் என்ற
எண்ணத்தில் பலரும் வீடு, நிலங்களை
விற்றும், அடகு வைத்தும், வட்டிக்குக்
கடன் வாங்கியும் திரட்டிய லட்சக்கணக்கான ரூபாயை தனியார் டிராவல்
ஏஜென்டுகளிடம் கொடுத்து, அவர்கள் மூலம் சிங்கப்பூர்,
மலேசியா, சவுதி, குவைத் உள்ளிட்ட
நாடுகளுக்கு வேலைக்குச் செல்கின்றனர்.
இவர்களில்
சிலருக்கு மட்டுமே உரிய வேலை,
சம்பளம், வசதிகள் கிடைக்கின்றன. பெரும்பாலானோர் ஏமாற்றப்பட்டு, ஒட்டகம் மேய்த்தல், கழிப்பிடங்களை
சுத்தம் செய்தல், புல் வெட்டுதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்தப்படு கின்றனர்.
மேலும், மிகக் குறைந்த
ஊதியம் வழங்கப்படுவதுடன், உணவு, தங்குமிட வசதிகளின்றி
கொத்தடிமைகள்போல நடத்தப் படுகின்றனர். லட்சக்கணக்கில்
செலவு செய்து வெளிநாட்டுக்குச் சென்றபோதும்,
அங்கு உணவுக்கும் கூட
வழியின்றித் தவிக்கின்றனர்.
எனினும்,
வெளிநாடு செல்வதற்காக வாங்கிய
கடன் மற்றும் வட்டியைச் செலுத்த
வேண்டு மென்பதற்காக, சொல்ல முடியாத துன்பங்களையும்
தாங்கிக் கொண்டு, அங்கேயே பலர்
பணி புரிகின்றனர். கடும் வேதனைக்கு உள்ளானவர்கள்,
ஊர் திரும்ப நினைத்தாலும் பல்வேறு
இடையூறு களை சந்திக்க வேண்டியுள்ளது.
வெளிநாட்டில்
இவர்களுக்கு வேலை தரும் நிறுவனங்கள்,
பாஸ் போர்ட்டை பிடுங்கி வைத்துக் கொள்வதால், மீண்டும் சொந்த ஊருக்குத் திரும்ப
முடியாமல் தவிக்கின்றனர். பெண் தொழிலாளர்கள்
பாலியல் துன்புறுத்தல் களுக்கு உள்ளாவதாகவும் இந்திய
வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு தொடர்ந்து புகார்கள் வருகின்றன.
இவற்றைத்
தவிர்ப்பதற்காக, வெளிநாட்டு வேலை குறித்து மக்களிடம்
விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் தமிழக காவல்துறை ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி மாநகர காவல் ஆணையர்
சஞ்சய் மாத்தூர் தெரிவித்துள்ளதாவது:
குவைத்
உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு பணிக்குச் செல்வோர்
பல்வேறு பிரச்சினைகளை சந்திப்பதாக அதிக
அளவில் புகார்கள் வந்துள்ளன. குறிப்பாக, போதுமான ஊதியம் கிடைக்காமல் இருப்பது, சொந்த ஊருக்குத்
திரும்ப முடியாமல் தவிப்பது, அதிக
நேரம் மற்றும் விடுமுறையின்றி வேலை
செய்ய நிர்பந்திப்பது, உடல் மற்றும் மனரீதியாக
துன்புறுத்தப்படுவது, தொழிலாளர் நலச் சட்ட உதவிகள்
கிடைக்காமல் தவிப்பது உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு உள்ளாகின்றனர்.
இதுபோன்ற
பிரச்சினைகள் இருப்பதால், குறிப்பிட்ட சில நாடுகளுக்கு பணியாட்களை அனுப்பி வைப்பதற்கான ஒப்பந்தம் மேற்கொள்வதை இந்திய அரசு நிறுத்தி
வைத்துள்ளது. ஆனால், அதையும் மீறி
வெவ்வேறு வழிகளில் சிலர் அந்நாடுகளுக்குச் சென்று,
பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகின்றனர்.
எனவே, வீட்டு வேலை மற்றும்
வெவ்வேறு பணிகளுக்காக, குவைத் உள்ளிட்ட நாடுகளுக்கு
சட்டத்துக்குப் புறம்பாகச் செல்ல வேண்டாம் என்று
பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும்,
பொய்யான வாக்குறுதிகளை அளித்தும், சட்டத்துக்குப்
புறம்பாகவும் அப்பாவி மக்களை வெளிநாடுகளுக்கு
வேலைக்கு அனுப்பும் டிராவல் ஏஜென்டுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக