நாகை மாவட் டம் வேதாரண்யம் தாலுகா புஷ்பவனம் காந்தி நகரை சேர்ந்த பெயின்டர் நவமணியன். திருப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி இந்திரா. விவசாய தொழிலாளி.
தேத்தாகுடியில் உள்ள ஒரு பள்ளியில் கோகில கண்ணன் பிளஸ்2 படித்து வருகிறார். இவர் கடந்த 20 நாட்களுக்கு முன் சைக்கிளில் பள்ளிக்கு சென்றார். அப்போது நல்லப் பாம்பு மீது சைக்கிளை ஏற்றி விட்டார். பின்னர் வீட்டுக்கு வந்து தாயிடம் நடந்ததை கூறினார்.
3 நாட்கள் கழித்து அவரது வீட்டுக்கு ஒரு நல்ல பாம்பு வந்துள்ளது. இதை பார்த்து அருகில் இருந்தவர்கள் அடிப்பதற்குள் அந்த பாம்பு தப்பி சென்று விட்டது. இதே போல் மூன்று முறை அவரது வீட்டுக்கு பாம்பு வந்துள்ளது. சைக்கிள் டயர் ஏறிய பாம்புதான் கோகில கண்ணனை துரத்துவதாக வீட்டார் நம்பினர்.
இதை தொடர்ந்து அங்குள்ள ஒருவரிடம் பாம்பு வராமல் இருப்பதற்காக கோகில கண்ணன் கையில் ஒரு கயிறு கட்டப் பட்டது. இருப்பினும் 3 நாட்களுக்கு பிறகு அந்த பாம்பு வந்து விட்டது. இதனால் மகனை பாம்பு கடித்து விடும் என்ற பயத்தால் நவமணியன், வீட்டின் அருகே ரூ.3,000 செலவு செய்து நான்கடி பள்ளம் தோண்டி அதன் நடுவில் பரண் அமைத்து இரவில் மகனுக்கு துணையாக உறவினர் ஒருவரையும் சேர்த்து படுக்க வைத்து பாதுகாத்து வருகிறார்.
48 நாட்களுக்கு இந்த பரணியில் இருந்தால் பாம்பு வந்து 48ம் நாள் குழியில் விழுந்து விடும். அப்போது அந்த பாம்பை அடித்து கொன்று விடுவோம் என்று இந்திரா கூறினார்.
10 ஆண்டுகளுக்கு அதே பகுதியில் மாரி முத்து என்ற பெண், பாம்பை அடித்து விட்டு விட்டார். அவரும் இதே போல் பரண் கட்டி வாழ்ந்து வந்துள்ளார். 48ம் நாள் பாம்பு வந்து அந்த குழியில் விழுந்து விட்டதாக அப் பகுதி மக்கள் கூறினர்.
பாம்பை அடித்தால் மீண்டும் வந்து கடிக்கும் என்ற நம்பிக்கையில் பரண் கட்டி வாழும் பள்ளி மாணவனை சுற்று வட்டார பகுதிகளில் மக்கள் வந்து பார்த்து செல்கின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக