சென்னையில் கனமழை மற்றும் வெள்ளத்தினால் விமான போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது. விமானங்கள் ஞாயிறு வரையில் இயக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் மழை குறைந்து வெள்ளம் வடியத் தொடங்கி உள்ளது. ஒரு சில பகுதிகளில் இன்று மீண்டும் மழை பெய்தாலும், பெரிய அளவில் வெள்ளம் தேங்கவில்லை. இதனால், போக்குவரத்து சீரடையத் தொடங்கி உள்ளது.
மழை குறைந்ததையடுத்து சென்னை விமான நிலையத்தில் தேங்கி உள்ள மழைநீரை வெளியேற்றும் பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மத்திய விமான போக்குவரத்து துறை இணைமந்திரி மகேஷ் சர்மா செய்தியாளர்களிடம் பேசுகையில், சென்னையில் மேலும் மழை பெய்யவில்லை என்றால் நாங்கள் நாளையில் இருந்து விமான போக்குவரத்தை தொடங்கி விடுவோம் என்று கூறினார். இந்த நெருக்கடியான நிலையில் அனைத்து விமான நிறுவனங்களும் சரியான விலையை பராமரிக்க வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுத்து உள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தின் ஓடுபாதைகள் பகல் நேரத்தில் விமானங்களை இயக்குவதற்கு உகந்ததாக இருப்பதாக விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
எனவே, நாளையில் இருந்து பகல் நேரத்தில் மட்டும் விமானங்கள் இயக்கப்பட உள்ளது. இத்தகவலை விமான போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஓரிரு நாட்களில் இரவு நேரத்தில் விமானங்களை இயக்குவதற்கான பணிகளை தொடங்கி உள்ளதாகவும் அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக