ஆப்பிள் நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் 16-ம் தேதி வெளியிட்ட புதிய ஐ.ஓ.எஸ். 9 வரிசை ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை ‘ஹேக்’ செய்பவருக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கவிருப்பதாக அமெரிக்காவின் வாஷிங்டனில் இயங்கிவரும் ‘ஸீரோடியம்’ என்னும் நிறுவனத்தை நடத்திவரும் சாவ்க்கி பேக்ரார் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இந்த ஐ.ஓ.எஸ். 9.1/9.2 பீட்டாக்களை ஒரு குழு ‘ஹேக்’ செய்துவிட்டதாக சாவ்க்கி பாராட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். அவர்களுக்கான பரிசுத்தொகை வழங்கப்பட்டு விட்டதாகவும் இதில் குறிப்பிட்டிருந்த சாவ்க்கி, பரிசு பெற்றவர்களின் பெயரை இதுவரை வெளியிடவில்லை.
வூபென் என்னும் ‘ஹேக்கிங்’ நிறுவனத்தையும் நடத்திவரும் சாவ்க்கி, இந்நிறுவனம் மூலம் அறிந்துகொள்ளும் ‘ஹேக்’ பற்றிய புதிய செய்திகளையும், அதன் புதிய வழிமுறைகளையும் பல்வேறு நாடுகளின் அரசுகளுக்குக் தெரிவிப்பதன் மூலமாக வருமானம் பார்க்கிறார்.
அந்தவகையில் சமீபத்தில் வெளியான ஆப்பிளின் புதிய ஆபரேட்டிங் சிஸ்டத்தினை ‘ஹேக்’ செய்யும் வழிமுறையைத் தெரிந்து கொண்டதன் மூலம் இதன் அடுத்த தயாரிப்புக்களை பாதுகாப்பானதாக மாற்றியமைக்க வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்பிளின் தயாரிப்புகள் தமது தகவல்களைப் பற்றி எளிதில் வெளியே கசியவிடாது என நம்புவதாலேயே பல்வேறு தொழில் முனைவோரும், வசதி படைத்தோரும் ஆப்பிள் தயாரிப்புகளை பெரிதும் நம்பி உபயோகிக்கின்றனர். ஒவ்வொரு முறை தனது தயாரிப்புகளை ஆப்பிள் அப்கிரேட் செய்து வெளியிடும்போதும், அது மேலும் பாதுகாப்பானதாக மேம்படுத்தப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
‘ஹேக்’ செய்வதற்காக வெளிப்படையாக அறிவிக்கப்பட்ட பரிசுத்தொகைகளிலேயே தற்போது வழங்கப்பட்ட ஒரு மில்லியன் (இந்திய மதிப்பில் சுமார் ஆறரை கோடி) மிக அதிமான தொகை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக