திருட வந்த இடத்தில், அவ்வீட்டாரின் ஏழ்மை நிலையை கண்டு மனம் வெதும்பிய திருடன், அவர்களிடம், 1,000 ரூபாய் பணம் கொடுத்து சென்றுள்ளான்.
வேலுார் மாவட்டம், ஆற்காடு அடுத்த முப்பது வெட்டியைச் சேர்ந்தவர், ரகுபதி, 55. தன் மனைவியுடன், ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில், குடிசை வீட்டில் வசித்து வருகிறார்.
இவர்களின், ஆறு மகள்களும் திருமணமாகி சென்றுவிட்டதால், இருவரும் தனிமையில் வசிக்கின்றனர். சரியான வேலை ஏதுமில்லாததால், அரசு வழங்கும் முதியோர் உதவித்தொகையே, இவர்களின் வாழ்வாதாரமாக உள்ளது.
இந்நிலையில் காலை, ரகுபதியின் வீட்டில் புகுந்த திருடன், அவரிடம் கத்தியை காட்டி பணம் மற்றும் நகைகள் இருந்தால் அதை எடுத்துக் கொடுக்குமாறு மிரட்டினான். தன்னிடம் ஏதுமில்லை எனக் கூறிய ரகுபதி, அரசு வழங்கும், 1,000 ரூபாய் உதவித்தொகை மூலமே குடும்பம் நடத்துவதாக கூறினார்.
இதை நம்பாத திருடன், வீடு முழுவதும் தேடிப் பார்த்தான். எதுவும் கிடைக்காததால், ரகுபதியின் ஏழ்மை நிலை கண்டு மனம் வெதும்பினான். இருவரையும் கண்டு மனம் இரங்கிய திருடன், அவர்களிடம், தன் பையிலிருந்த, 1,000 ரூபாயை கொடுத்துச் சென்றான். எனினும், போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக