பட்டுக்கோட்டையில் இருந்து தஞ்சைக்கு இன்று காலை தனியார் பஸ் புறப்பட்டு வந்தது. இந்த பஸ் காலை 8.40 மணியளவில் தஞ்சை அருகே உள்ள சூரக்கோட்டை சைதாம்பாள் புரத்தில் வந்து கொண்டிருந்தது.
அப்போது பஸ் திடீரென நிலை தடுமாறி ரோடு ஓரம் இருந்த 3 தென்னை மரம் மீது மோதியது. இதில் மரம் 2 ஆக உடைந்தது. அதன் பின்னரும் பஸ் கட்டுக்குள் அடங்காமல் நடு ரோட்டில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த ஒரத்தநாடு அருகே உள்ள கண்ணந்தங்குடி மேலையூரை சேர்ந்த துர்காதேவி (25) பஸ்சின் முன் பக்க கண்ணாடி வழியாக வெளியே விழுந்து மூளை சிதறி சம்பவ இடத்திலே பலியானார்.
அவர் ஒரத்தநாட்டில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். தீபாவளி பண்டிகைக்காக திருச்சிக்கு ஜவுளி எடுக்க செல்ல தஞ்சைக்கு வந்த போது விபத்தில் சிக்கி உயிரிழந்து விட்டார்.
இவரது தந்தை சந்திரகாசன். இவர் இறந்து விட்டதால் தாய் பிச்சையம்மாள் பராமரிப்பில் இருந்து வந்தார். இவர் வீட்டிற்கு ஒரே மகள் ஆவார். மகள் இறந்த தகவல் கிடைத்ததும் பிச்சையம்மாள் கதறி துடித்தார்.
விபத்தில் பஸ் பயணிகள் 34 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அவர்களில் கன்னுக்குடியை சேர்ந்த கருணாதேவி, ராமச்சந்திரன், பட்டுக்கோட்டையை சேர்ந்த சுஜிதா, செல்வமணி, ராமச்சந்திரன் உள்ளிட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை கலெக்டர் சுப்பையன், மாவட்ட பால்வளத் தலைவர் காந்தி, ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றிய தலைவர் ஆழி. கோவிந்தராஜ், ரெயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் ஜெயராமன் ஆகியோர் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்கள்.
முன்னதாக விபத்து நடந்த இடத்தையும் கலெக்டர் சுப்பையன் பார்வையிட்டார்.இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து ஜே.சி.பி. எந்திரம் மூலம் பஸ்சை அப்புறப்படுத்தினார்கள்.
பஸ் டிரைவர் வேகமாக ஓட்டி வந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தஞ்சை தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக