துபாயில் மகிழ்ச்சி இல்லாமல் இருப்பவர்கள் குறித்து அந்நாட்டு போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக பொதுமக்களிடம் கேள்வி கேட்டு ஆய்வு நடத்தி வருகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தில், துபாய் இரண்டாவது பெரிய நகராக உள்ளது. துபாயையும் அமீரகம் என்றுதான் அங்கு அழைக்கின்றனர். கடந்த முப்பதாண்டுகளில், உலகின் பணக்கார நாடுகளில் துபாயும் ஒன்றாக உருவாகி உள்ளது.
துபாயில் எண்ணெய் வளம் கொழிப்பது எல்லோரும் அறிந்ததுதான். துபாய், இப்போது உலகின் உல்லாச நகரமாக மாறிவிட்டது. சுற்றுலா மூலமாக துபாய்க்கு 85% வருவாய் கிடைப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் சுற்றுலாவிற்கு அளிக்கப்படும் முக்கியத்துவம். வரி இல்லா விற்பனை என சுற்றுலாவினருக்கு மிகவும் பிடித்த இடமாக துபாய் விளங்குகிறது.
துபாயின் பொன்விழா (50ம் ஆண்டு) வரும் 2021ம் ஆண்டு நடைபெற உள்ளது. பொன்விழா ஆண்டில் உலகில் மக்கள் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் வசிக்கும் நாடுகள் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் ஒரு இடத்தை பிடிக்க துபாய் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
தற்போது துபாய் 20வதுஇடத்தில் உள்ளது. இதற்கிடையே, துபாய் போலீசார் மக்களிடம் புதிய கருத்துக் கணிப்பை நடத்த தொடங்கி உள்ளனர். ‘‘துபாயில் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா’’, என்ற கேள்வி கேட்கப்பட்டு, அதற்கு அவர்களே குறிப்பிட்ட 3 பதில்களில் ஒன்றை தேர்வு செய்யுமாறும் ஆன் லைனில் கடந்த புதனன்று தகவல் கோரப்பட்டது.
முதல் நாளன்றே, போலீஸ் கேட்ட கேள்விக்கு 2 லட்சம் பேர் பதில் அளித்துள்ளனர். அதில் 84% மகிழ்ச்சியாக இருப்பதாகவும், 6% நடுநிலை வகித்தும், 10% மகிழ்ச்சியாக இல்லை என்றும் தகவல் அளித்துள்ளனர்.
மகிழ்ச்சியாக இல்லை என்று பதில் அளித்துள்ளவர்களிடம் சிலரை தேர்ந்தெடுத்து, ‘‘ஏன் மகிழ்ச்சியாக இல்லை’’ என்று விசாரிக்க இருப்பதாக போலீஸ் துறை தலைவர் மேஜர் ஜெனரல் கமீஸ் மட்டார் அல் மசீய்னா கூறியுள்ளார்.
காவல்துறை அதிகாரங்களுக்கு உட்பட்ட விஷயமாக இருந்தால் தீர்த்து வைப்போம். பிற துறை சார்ந்த விவகாரமாக இருந்தால், குறிப்பிட்ட துறைக்கு தகவல் தெரிவிப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக