தனியார் தொலைக்காட்சி முதன் முதலில் இந்த செய்தியை வெளியிடும் போது கூறப் பட்ட இரண்டு நபர்களில் ஒருவரான சகோ. ராஜ் முகம்மதுவை அழைத்துக் கொண்டு, ரியாத் விமான நிலையத்துக்கு அருகில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்றேன்.
முதல் மாடி அறை எண் 18 இல் தமிழகத்தை சேர்ந்த கையை இழந்த கஸ்தூரி என்ற சகோதரியை சந்தித்தோம். சுமார் 2 மணி நேரம் அவருடன் இருந்தோம். இதற்கு முன்பாக காவல் நிலையம் சென்று முதல் தகவல் அறிக்கையை பார்த்து சில விவரங்களை தெரிந்து கொண்டோம்.
(குடும்ப சூழ்நிலை) வரதட்சனை கொடுமை, குடி முதலான சமூகக் கொடுமைகளின் காரணமாக 55 வயதில் தன் பிள்ளைகளின் நலனை மட்டுமே நாடி வீட்டு வேலை செய்து சிறிது பொருள் ஈட்டிச் செல்ல சவுதி அரேபியா வந்துள்ளார்.
சவுதி தலைநகரில் உள்ள ஒரு செல்வந்தரின் 75 வயது மனைவிக்கு பணிப் பெண்ணாக தமிழகத்தைச் சேர்ந்த கஸ்தூரி என்ற இந்த ஏழை பெண்மணி 2 மாதங்களுக்கு முன் வந்துள்ளார்.
வந்த இடத்தில் இரண்டு மாதங்களில் எந்த ஒரு பெரும் அசம்பாவிதமும் நடக்க வில்லை என்று அவரே கூறினார். ஆனால் கை துண்டான சம்பவம் நடந்த அன்று, இரண்டு சேலைகளை சேர்த்து கட்டி, முதல் மாடியில் இருந்து பால்கனி வழியாக ரோட்டில் இறங்கி தப்பியோட செய்த முயற்சியின் போது, கை துண்டிக்கப் பட்ட நிலையில் கீழெ விழுந்துள்ளார்.
அவர் இருந்த அறையின் கதவு உட்பக்கம் தாள் போடப் பட்டிருந்ததாக FIR இல் உள்ளது. கஸ்தூரியும் சம்பவம் நடக்கும் முன் எஜமானியம்மாளைத் தவிர வேறு யாரும் வீட்டில் இல்லை என்றும் உறுதியாக கூறுகிறார்.
அந்த பெண்ணிடம் "உண்மையும், நியாயமும் எப்போதும் தோற்காது " என்று கூறி, குர்ஆன் தமிழ் மொழி பெயர்பை நிதானமாக படிக்குமாறு பணித்தோம்.
ஆனால் இந்த சம்பவத்தை தமிழகத்தில் தவறான, பொய் செய்திகளை பரப்பி வருகின்றனர். சரியான தகவல்களை சேகரித்து தர வேண்டிய தூதரகமும் இந்த விவகாரத்தில் மெத்தன போக்கையே கையாண்டு வருவது கண்டிக்கப் பட வேண்டிய ஒன்றாகும்.
நான் எடுத்துக் கொண்ட புகைப் படம் இத்துடன் இணைத்துள்ளேன். என்னுடன் இருப்பவர் ஈரோடைச் சேர்ந்த சலீம் என்ற சகோதரர். கடந்த 20 நாட்களாக இந்த பெண்ணை அருகிலேயே இருந்து அவருக்கு வேண்டிய உதவிகளை செய்து வருகிறார்.
தன் தாயின் வயதை அடைந்த கஸ்தூரியை படைத்த ஏக இறைவனுக்காக இந்த பணியை தனது ஓய்வு நேரத்தில் செய்து கொண்டிருப்பதாக கூறுகிறார் ஈரோட்டை சேர்ந்த சலீம்.
- ரியாத்திலிருந்து அபு ஃபாயிஸ்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக