முத்துப்பேட்டை பேரூராட்சிக் குட்பட்ட 17-வது வார்டு கொய்யா தோப்பு வடக்கு பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு பேரூராட்சி சார்பில் இன்னும் சாலை வசதி செய்துக் கொடுக்கவில்லை.
பல ஆண்டுகளாக இப்பகுதி குடியிருப்பு வாசிகள் பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தும் இதுநாள் வரை கண்டுக் கொள்ளவில்லை. தற்பொழுது மழை பெய்து வருவதால் சாலைகள் முழுவதும் முட்டிக்கால் அளவில் தண்ணீர் தேங்கி சேரும் சகதியுமாக காட்சி அளிக்கிறது.
இதனால் பொதுமக்கள் சாலையில் செல்ல சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் வாகனங்கள் சாலைகளில் உள்ள சகதிகளில் சிக்கி பல மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு மீட்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக சாலைகளில் உள்ள சகதிகளை அகற்றி சீரமைக்க பேரூராட்சி நிர்வாகத்திடம் நேரில் மக்கள் திரண்டு கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுநாள் வரை பெயர் அளவில் கூட பார்வையிட வரவில்லை.
இதனால் இப்பகுதி மக்கள் போராட்டம் நடத்த தயாராக உள்ளனர். இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த ஜெய்லானி மற்றும் விக்னேஷ் கூறுகையில்:
நாங்கள் இந்த பகுதியில் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வாழ்ந்து வருகிறோம். எங்கள் பகுதிக்கு எந்த வித அடிப்படை வசதிகளும் பேரூராட்சி நிர்வாகம் செய்து கொடுக்கவில்லை. முக்கியமாக சாலை வசதிகளை செய்துக் கொடுக்காதது வேதனையை தருகிறது.
இன்றைக்கு சாலை முழுவதும் சேரும் சகதியுமாக உள்ளதால் நாங்கள் நடந்து கூட செல்ல முடியாத அவலம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இதனால் பல்வேறு தொற்று நோய்களும் பரவி பொதுமக்களை பாதிப்படைய வைத்துள்ளது.
எங்கள் பகுதியை பேரூராட்சி நிர்வாகம் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்தது போல் வைத்துள்ளது. எங்களுக்கு எப்பதான்? நியாயம் கிடைக்கும் என்று நாங்கள் காத்திருந்து.. காத்திருந்து.. காலங்கள் போனதுதான் மிச்சம்.
உடனடியாக சாலை வசதியைச் செய்துக் கொடுக்காவிட்டால் சாலையில் கிடக்கும் சகதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.
இது குறித்து அ.தி.மு.க பிரமுகர் மூர்த்தி கூறுகையில்: நான் அ.தி.மு.க காரன் என்று சொல்லிக் கொண்டு இப்பகுதியில் குடியிருக்கவே வெட்கமாக உள்ளது என்றார்.
இது குறித்து ரெத்தினசாமி கூறுகையில்: இந்த சாலையை முறையாக அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி உடனடியாக சாலை அமைத்து தராவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன் என்றார்.
நிருபர்-மு.முகைதீன்பிச்சை முத்துப்பேட்டை



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக