செல் போன் கடைக்குள் புகுந்து ரூ,50 ஆயிரம் மதிப்பு பொருட்கள் மற்றும் ரொக்கத்தை திருடிய சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை, கேணிக்கரை கடை வீதியில் செல் போன் கடை நடத்தி வருபவர் அன்பரசன்(28).
நேற்று முன் தினம் இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு சென்றார். நேற்று காலை கடை பூட்டு உடைக்கப் பட்டு கிடந்தது. இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த அன்பரசன் கடைக்குள் சென்று பார்த்த போது உள்ளேயிருந்த ரூ.14 ஆயிரம், செல் போன், பென் டிரைவ், மெமரிகார்டு மற்றும் செல் போனுக்கு தேவையான பொருட்கள் திருடப் பட்டிருந்தது தெரிய வந்தது.
இதன் மதிப்பு ரூ.50 ஆயிரம். இது குறித்து மயிலாடுதுறை போலீசார் விசாரணை நடத்திய போது அதிகாலையில் கடைக்குள் ஒரு சிறுவன் இருந்ததும், அதைக் கண்ட பக்கத்துக் கடைக்காரர் அவனிடம் கேட்ட போது, கடை கண்ணாடி உடைந்து கிடக்கிறது, அண்ணனுக்கு போன் செய்தேன், நான் வரும் வரை கடையிலேயே இரு என்று கூறினார், அதனால் காத்திருக்கிறேன் என்று கூறியதும் தெரிய வந்தது.
இதையடுத்து சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக