சிறுபான்மையினர் சமூக இளைஞர்களுக்காக நயீ மஞ்ஜில்(புதிய தளம்) என்ற புதிய திட்டத்திற்கு மத்திய அரசு நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டின் போது இதற்கான அறிவிப்பை நிதி மந்திரி அருண் ஜெட்லி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த திட்டம் குறிப்பாக சிறுபான்மையின இளைஞர்களுக்கு ஒருங்கிணைந்த கல்வி மற்றும் வாழ்வாதார பயிற்சிகளை வழங்குவதற்காக கொண்டுவரப்படுவதாக அப்போது அவர் தெரிவித்தார்.
மேலும், பள்ளிப் படிப்பை பாதியில் கைவிட்ட அல்லது மதரஸா போன்ற மதக் கல்வி நிறுவனங்களில் பயின்ற சிறுபான்மையின இளைஞர்களுக்கு, முறையான கல்வி (8 அல்லது 10-ஆம் வகுப்பு வரை) மற்றும் திறன் வளர்ப்பு பயிற்சிகளை வழங்கும் நோக்கில், இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அருண் ஜெட்லி கூறியிருந்தார்.
இந்நிலையில், நயீ மஞ்ஜில் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், “நாடு முழுவதும் ரூ.650 கோடி மதிப்பில் 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படவிருக்கும் இத்திட்டத்துக்கான 50 சதவீத நிதியுதவி, அதாவது ரூ.325 கோடியை உலக வங்கி வழங்குகிறது” என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த திட்டத்திற்கு கடந்த வாரம் மத்திய நிதித்துறை ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக