ஞாயிறு, 6 டிசம்பர், 2015

தன்னிலை மறந்து பேசுகிறார் கமல் ஹாசன்: அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கண்டனம்.

தமிழக அரசின் செயல்பாடு குறித்து விமர்சித்த நடிகர் கமல் ஹாசனுக்கு அரசு கண்டனம்  தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து தமிழக நிதி மற்றும் பொதுப் பணித் துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- 



கடந்த 100 ஆண்டு காலம் கண்டிராத கன மழை வெள்ளத்தால் தத்தளித்து தவிக்கின்ற சென்னை மாநகரம் மற்றும் ஏனைய மாவட்ட  மக்களைக் காப்பாற்றி, மீட்பு, நிவாரணம், சீரமைப்பு எனும் முப்பரிமாணத்தில், போர்க்கால நடவடிக்கை என்பதற்கும் மேலான அவசர கால அடிப்படையில் மழை வெள்ள  நிவாரணப்  பணிகளை  முதலமைச்சர் மேற்கொண்டுள்ளார். 

இந்த அசாதாரண சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு ஆறுதலாகவும், கடமையே கண்ணாகக் கொண்டு செயல்படும் அரசுக்கு ஆதரவாகவும், உறுதுணையாக இருக்க வேண்டியதை விடுத்து, நடிகர் கமலஹாசன்,  தன்னிலையும், முன்னிலையும் மறந்து, அரசு நிர்வாகம் செயல் இழந்துவிட்டதாகவும், நிவாரண நிதிக்கு அரசு அவரிடம் பணம் கேட்டது போன்றும், நிவாரணப் பணிகளைச் செய்யத்தானே அரசைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்றும், மக்களின் வரிப்பணம் எங்கே போகிறது என்று தெரியவில்லை என்றும், தனது தகுதி மீறிய, தடுமாற்றமான, தவறான கருத்துக்களை  இணையதளம்  ஒன்றுக்கு பேட்டியாக அளித்துள்ளதாக 4-12-2015 அன்று  ஒரிரு  நாளிதழ்களில்  செய்தி  வெளிவந்துள்ளது. 

எதையும் சரியாகப் புரிந்துகொண்டு தெளிவாகப் பேசுவது போல குழப்புகின்ற கமலஹாசன், இந்த விஷயத்திலும் உண்மை நிலவரங்களைச் சற்றும் உணர்ந்து  கொள்ளாமல்,  பிதற்றி இருக்கிறார். 

கமலஹாசன்  எடுக்கின்ற திரைப்படத்தில் வேண்டுமானால், எவ்வளவு பெரிய இயற்கை பேரிடர் என்றாலும், அதை ஒரே காட்சியில் சீர்படுத்தி விடுவதாகவும், ஒரே பாடலில் அதை சரிப்படுத்தி விடுவதாகவும் காட்டிவிடலாம். ஆனால் யதார்த்தம் என்பது வேறு. எதிர்பாராத வகையில் இயற்கை நம்மைத் தாக்கும்போது, மீட்பு, நிவாரணம், சீரமைப்பு என படிப்படியாக நிவாரண நடவடிக்கைகளை திட்டமிட்டு மேற்கொள்வதன் மூலமாகத்தான் மாநிலத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வர முடியும். அதைத்தான்  முதலமைச்சர் தற்போது சிறப்பாகச் செய்து கொண்டிருக்கிறார். 

இயற்கை  பேரிடர் பற்றி சரியாகத் தெரிந்துகொள்ள வேண்டுமானால் அவரது 'அன்பே சிவம்' திரைப்படத்தை, அவர் மீண்டும் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். 

போர்க்கால நடவடிக்கைகள் மாண்புமிகு அம்மா அவர்களது அரசால் மேற்கொள்ளப்பட்டிருக்கும்  சமயத்தில், அரசு நிர்வாகம் செயலற்று போனதாக  கமலஹாசன்  தெரிவித்திருப்பது என்பது உண்மைக்கு முற்றிலும் மாறானது மட்டுமல்ல, இது தமிழக மக்களையே அவமதிக்கும் செயல் ஆகும். 

இந்த இயற்கைச் சீற்றத்தினை வெற்றிகொள்ளும் வகையில் அரசு, போர்க்கால அடிப்படையில் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறித்து அவர் தெரிந்தும், தெரியாததுபோல் நடித்துள்ளார். அதனால்தான் மக்களின் வரிப் பணம் என்ன ஆனது என்றே தெரியவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

மக்களிடமிருந்து பெறப்பட்ட வரிப் பணம் தமிழக அரசால் தவறாக கையாளப்பட்டது போன்ற ஒரு மாயத்தோற்றத்தினை உருவாக்கி, அரசுக்கு மக்களிடம் அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும், அதன் மூலம் அரசியல் சுயலாபம் பெற வேண்டும் என்று முனையும் தீயசக்திக்கு கமலஹாசன் விலைபோய்விட்டாரா  என்பதை  அவர்தான்  தெளிவுபடுத்த வேண்டும். 

மக்களின் வரிப் பணம் என்ன ஆனது என்று கமலஹாசன் தெரிந்துகொள்ள வேண்டும்  என்றால் அரசின் கடந்த நான்கு ஆண்டுகளின் வரவு செலவுத் திட்ட  அறிக்கைகளை  தனது படப்பிடிப்புகளுக்கிடையே  சற்று  நேரம் ஒதுக்கி, அவர்  படித்துப் பார்த்திருக்க வேண்டும். தமிழக மக்களின் வரிப் பணம் ஒரு ரூபாய் கூட வீணாகச் செலவழிக்கப்படக் கூடாது என்பது மட்டுமல்ல, அந்த ஒவ்வொரு ரூபாயும் பயனுள்ள வகையில் மக்கள் நலப் பணிகளுக்கு மட்டுமே  செலவிடப்பட  வேண்டும் என்பதிலும் கண்ணும் கருத்துமாக இருந்து  மக்கள்  நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருபவர் முதலமைச்சர். 

கார்ப்பரேட்  திட்டத்திற்கு 4000 கோடி ரூபாய் வரை செலவிட முடிவதாகவும், அந்த பணத்தை நாட்டில் உள்ள 120 கோடி மக்களுக்கும் ஏன் பிரித்துக் கொடுக்கக்கூடாது என்றும் கமலஹாசன் அறிவுஜீவி போன்று ஒரு வினா எழுப்பியுள்ளார். இந்த வினாவை அவர் மத்திய அரசைப் பார்த்து எழுப்பியுள்ளார் போலும்!  அதை ஏன் இப்போது கேட்கிறார் என்று புரியவில்லை. மத்திய அரசின் மீது  அவருக்கு என்ன கோபமோ தெரியவில்லை.  ஒருவேளை,  சினிமாத்  துறையின் மீது மத்திய அரசு விதித்த சேவை வரி தள்ளுபடி செய்யப்படவில்லை என்கிற கோபமோ, என்னவோ! அந்தக் கோபத்தை  தமிழ்நாட்டின் மீது காட்டி, தமிழக மக்களை  குழப்ப  வேண்டாம்  என்று  அவரை  நான்  கேட்டுக்கொள்கிறேன். 

கமலஹாசன் தனது ஒட்டுமொத்த சொத்துக்களையும் கொட்டி எடுத்ததாகச் சொல்லும் ஒரு திரைப்படம் வெளியிடப்படுவதில் அடுக்கடுக்கான சிக்கல்களை அவர் சந்தித்த நேரத்தில் சுய லாபத்திற்காக, தமிழ்நாட்டை விட்டும், இந்தியாவை விட்டும் வெளியேறி விடுவேன் என்று சொன்னவர்தான் கமலஹாசன். அப்போது,  அந்தப் பிரச்சனையை தீர்த்துவைத்த முதலமைச்சருக்கு நன்றி கூறியதை மறந்துவிட்டு, தற்போது அவர் பேட்டி  அளித்திருக்கிறார். 

கமலஹாசனிடம் அரசு எவ்வித யாசகமும் கேட்கவில்லை. ஆனால், அரசு நிவாரண நிதி கேட்பதாகவும், தான் மக்களை நேசிப்பதால் உதவி வழங்குவதாகவும் தேவையற்ற கருத்துகளை அவர் தெரிவித்து இருப்பது மலிவான வகையில் விளம்பரம் தேடுவதற்கான முயற்சியே ஆகும். இந்த வகை விளம்பரத்திற்காகத்தான், கும்பகோணம் பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டபோது, பாதிக்கப்பட்ட குழந்தைகளின் குடும்பங்களுக்கு 12 இலட்ச ரூபாய் உதவி வழங்குவதாக அவர் தெரிவித்தாரா? உண்மையிலேயே அந்த உதவியை அவர் வழங்கினாரா? யாரிடம் வழங்கினார் என்பதை அவரால் தெரிவிக்க இயலுமா? 

இதேபோன்றுதான், அவர் சமீபத்தில் ஒரு விளம்பரப் படத்தில் நடித்ததற்காக கிடைத்த பல கோடி ரூபாயை ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்கியதாக செய்திகள் பரப்பப்பட்டன. ஆனால் சம்பந்தப்பட்ட நிறுவனம், அவ்வாறு எந்த உதவியையும் அவர் வழங்கவில்லை என மறுப்பு வெளியிட்டது என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன். 

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...