முத்துப் பேட்டை போலீஸ் நிலையம் எதிரே வாலிபரை, மர்ம நபர்கள் அடித்து, உதைத்தனர்.
திருவாரூர் மாவட்டம், முத்துப் பேட்டை காவல் நிலையம் எதிரே உள்ள ஒரு கடை வாசலில் 35 வயது மதிக்கத் தக்க வாலிபர் ஒருவர் நேற்று நின்று கொண்டிருந்தார்.
அப்பொழுது காரில் வந்து இறங்கிய ஒரு கும்பல் அவரை சரமாரியாக நீண்ட நேரம் அடித்து உதைத்தனர். நிலைத் தடுமாறிய அவர் அடித்தாங்க முடியாமல் கீழே மயங்கி விழுந்தார்.
இந்த சம்பவத்தை நேரில் கண்ட பொது மக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். சத்தத்தை கேட்டு அங்கு வந்த போலீசாரும் வேடிக்கை பார்த்தனர். அப்பொழுது வாலிபரை தாக்கிய அந்த கும்பல் எந்த வித பதற்றமும் இல்லாமல் அங்கிருந்து சென்றனர்.
அதன் பிறகு சில நிமிடங்களில் அங்கு வேறொரு காரில் வந்த ஒருவர் தாக்கப்பட்ட அந்த வாலிபரை தூக்கி காரில் ஏற்றி சென்றார். தாக்கப் பட்டவர் யார், எந்த ஊர், தாக்கியவர்கள் யார், எதற்காக தாக்கினர் என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக